செவ்வாய், 22 மே, 2018

நான் - அவன்


-ந.மயூரரூபன்




ஆண்டவரே இயேசுவே!
உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்க இன்று எனக்கு மீண்டுமாக ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற உமது கருணைக்கு நன்றி செலுத்துகிறேன். உமது அன்புக் கட்டளையைப் பின்பற்றுவது எளிதான ஒன்றாக அமையவில்லை. கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மைக் கல்லாயிற்று என்று இரண்டாம் வாசகத்தில் வாசிக்கக் கேட்கிறேன் இறைவா!
தன்னைப்; புறக்கணிக்கும் குழந்தைகளுக்கு மூலைக்கல்லாய் விளங்க அவர்கள் ஒவ்வொன்றாய் இழந்து போகிறார்கள். அவர்களைத் திடப்படுத்த வேண்டுமாய் செபிக்கிறேன். என்னைச்சுற்றி வாழும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற உமது கருணைக்குச் செவிகொடுக்க நல்ல மனதைத் தர வேண்டுகிறேன். என் விருப்பத்திலும் சிந்தனையிலும் உமது அருள் வரங்கள் நிரம்பி வழிய என் இனிய கிறிஸ்துவின் பெயரால் செபிக்கிறேன்.
ஆமென்.
.............
..............
1.    மரத்தின் வேர்களிலிருந்து பாம்பு மெதுவாக ஏற ஆரம்பிக்கிறது.
நான் ஒருபோதும் காயினாக† இருக்க விரும்பியதேயில்லை. ஆனால் இறைதூதனின் உடைகள் சற்றும் எனது உடலில் பொருந்தியிருக்கவில்லை என்பதையும் உணர முடிந்தது. காணிக்கையின் சடங்குகள் மீதியாய் வைத்திருந்த நறுமணத்தின் சுவடுகளை எனதுடைகளின் இழைகளில் நுகரவே முடியவில்லை. பலியாட்டின் கழுத்திலிருந்து இரத்தம் ஒழுகிக் காய்ந்து பின் மணக்கும் இழையாய் அது உறைந்திருக்க உணர்ந்தேன்.
நான் என்னில் நுகரும் காயினின் வியர்வையை நீங்களும் நுகர்ந்திருக்கிறீர்களா?
என்னை அப்படிப் பார்க்காதீர்கள். உங்கள் முகத்தின் தசை நெளிவை உன்னிப்பாகப் பார்க்கிறேன். மூக்கின் அசைவில் எனது விழிகள் கவனமாயே இருக்கின்றன.
உதட்டை ஏன் இப்படிச் சுழிக்கிறீர்கள்?
என்னை அறிந்துவிட்டீர்களா?
ஆதாமுக்கு ஒருபோதும் இரண்டு மைந்தர்கள் இருக்கமுடியாது. பாவந்தான் வளரவேண்டுமென்பது படைப்பின் ஒவ்வொரு துளைகளிலும் நிரம்பிவரும் மது.
தாம் ஏவாளுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர் அவர்கள் காயீன் மற்றும் ஆபேல். காயின் விவசாயி. காயின் கடவுளுக்கு காணிக்கையாக விளைச்சலில் மிச்சமிருப்பதை கொஞ்சம் எடுத்து வைத்தான். ஆபேல் தன் சிறந்த ஆடுகளில் ஒரு முதல்குட்டியை எடுத்து அதன் சிறந்த பாகங்களை பலியாகத்தந்தான். ஆகவே ஆபேலின் பலி கடவுளுக்கு விருப்பமாக இருந்தது. அதை எற்றுக்கொண்டார். காயினின் பலியை ஏற்றுக்கொளளவில்லை.
இதனால் காயின், ஆபேலின் மேல் வன்மம் கொண்டான், மேலும் ஆபேலை கொல்லத்துடித்தான். கடவுள் காயினிடம்,பாவம் உன்னை சிக்கவைக்க காத்திருக்கிறது, அதிலிருந்து உன்னை காத்துக்கொள்' என எச்சரித்தார். ஆனாலும் காயினின் வன்மம் வளர்ந்தது. தன் தம்பி ஆபேலை ஒரு வயல்வெளிக்கு அழத்துச்சென்று கொலை செய்தான்.
கடவுள் காயினிடம்,'உன் தம்பி எங்கே?', என 'என் தம்பிக்கு நான் காவலாளியா என்ன?' என பதில் தந்தான் காயின். கடவுள் அவனை தூர நாட்டிற்கு ஓடிப்போகும்படி சபித்தார். 'நான் தூர நாட்டிற்கு ஓடிப்போனால் என்னை கொன்று போடுவார்களே? இந்தத்தண்டனை கொடுமையானது.' என காயின் முறையிட, கடவுள் அவனிடம், 'உன்னை கொல்பவனுக்கு பலமடங்கு தண்டனை காத்திருக்கிறது.' என்று கூறி, யாரும் அவனை கொல்லாதபடி அவன்மீது ஒரு அடையாளமிட்டார்.


உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் ஆபேல் ஒரு பொருந்தாப் படைப்பு.
படைப்பின் அந்த இடுக்குகளில் சொட்டும் மதுவை அழைந்தள்ளி மயங்கும் பாவத்தின் மைந்தன் நான். அந்தச் சதை நிலத்தின் மணல் துளைக்குள் அவனைப் புதைத்தேன். இரத்தத்தில் திரண்ட மணல் இன்னமும் என் மூளைக்குள் குறுகுறுத்தவண்ணம் உருண்டு கொண்டிருக்கின்றன.
பாவம், என்னைச் சிக்கவைக்க ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் காத்து நிற்கிறது. அது மரணமா? இந்த மரணத்துடன் பாவம் முடிந்துவிடும். அப்படி முடிந்துவிட்டால்....
முடியாது.
என்மேல் பொறிக்கப்பட்ட அடையாளம் தெரிகிறதா உனக்கு?
அதையா இவ்வளவு நேரமும் தேடுகிறாய்?
குறிசுட்ட மாடு நான். அடையாளங் காணும் நீ ஒருபோதும் என்னைக் கொலை செய்யமாட்டாய்.
பாவம் முடிந்துவிடக் கூடாது.


2.    பாம்பு மரத்தின் தண்டுப் பகுதியை சுற்றியபடி மேல்நோக்கி வளர்ந்துகொண்டிருந்தது.
'பாவங்களின் பெயரால் இந்தமண் அழிக்கப்பட இருக்கிறது. நீ உன் மனைவி பிள்ளைகளோடு ஓடித்தப்பு'
தூதர்கள் சொன்னார்கள்.
என்மேல் பொறிக்கப்பட்;ட அடையாளம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது: நான்  அவ்வாறுதான் நினைத்தேன்.
மண்ணைப்பார்த்தேன். ஆதாமும் ஏவாளும் கலவி கொண்ட மண்.
பாவங்கள் நிறைந்திருக்கின்றனவா?
பாவத்தை அழிக்கும் வல்லமை ஒருவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
மீண்டும்  எச்சரித்தார்கள்.
'இங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடித்தப்புங்கள். திரும்பிப் பார்த்தால் சுடப்படுவீர்கள்.'
மணலில் புதைந்து கடலில் மிதந்து ஓடினார்கள். திரும்பிப் பார்க்கமுடியாதா என் மண்ணை.
யுத்தம் உச்சமடைந்திருந்தபோது அவன் யுத்த களத்தில் இருந்தான். அவனது குடும்பம் யுத்தத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. குண்டுகள் முழங்கிக் கொண்டிருந்தன. இரவுகள் தொடர்ந்து வெடித்துப் பிளந்துகொண்டிருந்தன. இரத்தம் எங்கும் ஊற்றெடுக்கத் தொடங்கியிருந்தது.
பகலும் இரவும் பங்கருக்குள்ளேயே தொடர்ந்து வந்து போகத் தொடங்கியிருந்தது. முற்றுமுழுதான சுடலையாய் அந்த நிலம் விரிந்திருந்தது. ஏங்கும் எரிந்துகொணடNயிருந்தது.
' இன்னும் கொஞ்ச நேரங்கூட நிக்கேலாது. எல்லாப்பக்கத்தாலயும் அடிச்சுக் கொண்டு வாறாங்கள். கடக்கரைப் பக்கத்தாலயும் அசையேலாது.... இப்ப இதில மாட்டுப் பட்டுச் செத்தால் அது அநியாயம்.... என்ன பிரயோசனம் இருக்கு...'
ஒன்றுமே பிரயோசனமில்லைத்தான்.
காயப்பட்டு உடல் கிழிந்து கிடந்தவர்களின் கதறல்கள் காற்றை மாரடித்து அழவைத்துக் கொண்டிருந்தது. உன்மத்தங் கொண்டதுபோல் அது சுழன்றடித்து வீசத் தொடங்கியிருந்தது.
வானத்திலிருந்து தீப்பிழம்புகள் மண்மீது கொட்டுப்பட்டன. அந்தப்பாவ மண் தீப்பிடித்தெரிந்தது. லோத்துவின்† மனைவியென ஒரு கணம் அவள் திரும்பிப் பார்த்தாள். உப்புக்கல் சிலையாய்க் கடலில் கரைந்து போனாள்.
பாவம் செய்தவன் கடந்து போனான்.
வாழ்க்கை பாவத்தின் மீதேறிக் கொடிபிடித்துச் சிரித்தது.

ஆபிரகாமின் அண்ணன் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்துவந்தார் அவர் நீதிமான்
இரு தேவ தூதர்கள் சோதோம் கொமெராவில் லோத்துவின் வீட்டில் வந்து தங்கினர். லோத்துவிடம்,'பாவங்களின் பேரில் சோதோமும் கொமெராவும் கடவுளால் அழிக்கப்படவிருக்கின்றன. நீ உன் மனைவியோடும் மகள்களோடும் சோதோமை விட்டு உடனே வெளியேறு' என்றனர்.
லோத்து தன் மருமகன்களை தம்மோடு வருமாறு கெஞ்சினார். அவர்கள் லோத்துவின் பேச்சை கேட்காமல் சோதோமில் தங்கினர்.
லோத்துவும் அவர் மனைவியும் மகள்களும் சோதோமை விட்டு வெளியேற மனமின்றி நின்றுகொண்டிருந்தபோது தேவதூதன் அவர்களை கைபிடித்து அழைத்துச்சென்று,'சோதோமிலிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போங்கள், திரும்பிப் பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள்', எனக்கூறி சோதோமிலிருந்து அவர்களை வெளியேற்றினார்.
லோத்துவின் குடும்பம் வெளியேறியதும் வானத்திலிருந்து தீப்பிழம்புகள் சோதோம் கொமெரா மீது விழுந்தன. இரு பாவ நகரங்களும் அதன் அருகிருந்த சில நகரங்களும் பற்றி எரிந்தன.
லோத்துவின் மனைவி கடவுளின் ஆணையை மறந்து எரியும் நகரங்களை திரும்பி பார்த்தாள். பார்க்கவும் உப்புக்கல் சிலையாய் மாறினாள்.


3.    பாம்பு நிற்காமல் மரத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டேயிருந்தது
என்னை இரகசியமாய் ஆட்சித் துணையாய் அழைத்தார்கள்.
அரச அந்தஸ்து அது. அதிகாரம் காலடியில் வாலாட்டடிக் கொண்டு நின்றது.
குடமுழுக்கு ஒன்றும் செய்யவில்லை. பூக்கள் தூவவில்லை. தலைக்கு எண்ணெய் ஊற்றாமலேயே கதிரையின் காலருகுக்கு இழுத்தார்கள்.
மனதுக்குள் பறை, மூலை முடுக்கெல்லாம் அதிர வாசித்துக் கொண்டிருந்தது. அவனது பயமும் மகிழ்ச்சியும் பதட்டமும் பறையொலியல் சிக்குப்பட்டு அலைந்தலைந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது.
மனதின் புதர்களெல்லாம் இருட்டில் மண்ட, பறையொலி மட்டும் எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. பொல்லாத ஆவியாய் மனம் குத்துக்கரணமிட்டுக் குதித்தது.
என் மனதின் பறையதிர்வால் இந்த ஆவியை ஓட்ட முடியவேயில்லை.
நான் முகாமுக்குள் அடைபட்டபோது, தாவீதைக்† கொன்றிருந்தேன்.
என் மனதைத் தன் பறையால் தொடர்ந்து அருட்டிக் கொண்டிருந்தவன் அவன். தான் கடவுளின் துணையோடு என்னைக் கொல்வேன் என சபதமிட்டிருந்தான். எல்லோரும் சேர்ந்து அவனை அதட்டினார்கள். ஓடிவிடு எனத் துரத்தினார்கள். அவன் அசையவேயில்லை.
போருடையைத் தூக்கியெறிந்தான். சாரத்துடனும் சேட்டுடனும் என்னுடன் போர் புரியத் தயாரானான். அவனிடம் பாரிய ஆயுதம் எதுவுமேயில்லை.
என்னிடம் கத்தி ஒன்றிருந்தது.
கற்களால் என்னை அடிக்கத் தொடங்கினான்.
வெறுஞ்சிறுபயல்.
கடவுளின் பெயரால் என்னை அடித்துக் கொண்டேயிருந்தான். என்னைக் கொல்பவனை ஆயிரமாயிரம் பாவங்கள் சூழ்ந்துகொள்ளுமென்ற கடவுளின் சாபவரத்தை அவன் அறிந்திருக்கவேயில்லை.
எனக்குள்ளிருந்த ஆவி துடியாட்டம் போடத் தொடங்கியது. மெதுவான பறையொலி ஒலிக்கத் தொடங்கியருந்தது. கத்தியெடுத்து அவனைக் கொன்று போட்டேன். சரசரவென்று அவன் தலையை அறுத்தெடுத்துக் கொண்டேன். மணலில் இரத்தம் கொப்பளித்துப் பரவி  ஊறத் தொடங்கியருந்தது.
அவனது கண்கள் என்னையே வெறிக்கப் பார்த்தபடி நிலைகுத்தியிருந்தன. என் மனதின் இருளுக்குள் அந்தக் கண்கள் மெது மெதுவாய்ப் புதைந்தும் போயின.
நான் கோலியாத்† என்பதை அவன் மட்டுமே சொல்ல முடியும்.

சாமுவேல் கடவுள் கான்பித்த படியே பெத்தலகேமிற்குச் சென்று ஈசாயின் குமாரன் தாவீதுக்கு எண்ணெய் ஊற்றி அரசனாக்கினான், ஆனால் அவன் மிகவும் சிறியவனான படியால், அவனுக்கு சவுலால் ஏதும் ஆபத்து வராமலிருக்க அதைவெளிப்படையாக அறிவிக்கவில்லை.
சவுலுக்கு அசுத்த ஆவி வந்து நிலைகுலையச் செய்தது, ஆகவே கின்னரம் வாசிக்கும் ஒருவனை அழைத்து வந்து அவனுக்கு அசுத்த ஆவி மேலிடும் போதெல்லாம் கின்னரம் வாசித்து, அந்த ஆவியை சாந்தப்படுத்த முயன்றார்கள் அப்போது தாவீது கின்னரம் வாசிப்பதில் வல்லவன் என அறிந்து அவனை சவுலின் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். தாவீதும் அந்த பொல்லாத ஆவி சவுலின் மேல் வரும் போது கின்னரம் வாசித்து சவுலை குணமாக்குவான்.
அந்தக் காலகட்டதில் பெலிஸ்தியர் மற்றும் இஸ்ரவேலர் இடையேயான போர் உச்ச கட்டத்தில் இருந்தது போர்க்களத்தில் பொலிஸ்திய வீரனான கோலியாத் என்பவன், இஸ்ரவேலரைப் பார்த்து தன்னை வென்றால் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரின் அடிமை... என்னிடம் யார் வந்து சன்டை போடுகிறீர்கள் என்று சவால் விடுவான். இதைக் கேட்ட இஸ்ரவேலர்கள் சிதறி ஓடுவார்கள். இப்படியே நாற்பது நாட்கள் இஸ்ரவேலர்களைப் பார்த்து சவால் விடுவதும் அதைக் கேட்ட இஸ்ரவேலர்கள் சிதறியோடுவதும் வாடிக்கையாக இருந்தது.
தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுலோடு போர்க்களத்தில் இருந்தனர், அதனால் தாவீதின் அப்பா அவர்களுக்கு உணவு கொன்டுபோய் கொடுத்து அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுவா என தாவீதை போர்க்களத்திற்கு அனுப்பினார், தாவீதும் தன் தகப்பனார் சொன்னபடியே போர்க் களத்திற்குச் சென்று தன் சகோதரர்களைப் பார்க்கப் போனான்,அப்போது கோலியாத் வழக்கம் போல இஸ்ரவேலருக்கு எதிராக வந்து நின்று சவால் விட்டான், ஆனால் இஸ்ரவேலர்கள் சிதறி ஓடினார்கள் இதைக் கண்ட தாவீது, நான் கடவுளின் துனையோடு இவனை கொல்லுவேன் என்று சொன்னான். இதைக் கேட்ட தாவீதின் சகோதரர்கள் தாவீதை மிரட்டி அவனை வீட்டிற்கு திரும்பச் சொன்னார்கள். ஆனாலும் அவன் திரும்பிப் போகாமல் சவுலிடம் போய் நான் கோலியாத்தை வீழ்த்தத் தயார் என்று சொன்னான், அதற்கு சவுல் நீ மிகவும் சிறியவன் உன்னால் முடியாது, நீ திரும்பி உன் வீட்டிற்குப் போ என்று சொன்னான்.
தாவீது சவுலைப் பார்த்து நான் ஆடுமேய்க்கும் போது என் ஆட்டை ஒருமுறை சிங்கமும் ஒரு முறை கரடியும் கவ்விக் கொண்டு போனது ஆனால் நான் அவைகளை கொன்று எனது ஆடுகளை மீட்டேன் அந்த சிங்கம் கரடி போல இந்த கோலியாத்தும் நம் கடவுளின் முன்னால் சிறியவனே என்று சொன்னான்.சவுலும் அதற்கு சம்மதித்து தாவீதை போர் உடை அணியச் சொன்னான், தாவீது போருடையணிந்து நடந்து பார்த்தான், அது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்த படியால் அவைகளை கழற்றிப் போட்டு விட்டு சாதாரண உடையோடு கோலியாத்தை எதிற்கச் சென்றான்.
போர்க்களத்தில் கோலியாத் கையில் மிகப்பெரிய வாள் இருந்தது தாவீதின் கையில் ஆற்றிலிருந்து எடுக்கப் பட்ட ஐந்து கூளாங்கற்களும் கவணும் மட்டுமே இருந்தன, கோலியாத் தாவீதைப் பார்த்து நீயோ சிறுவன், உன்னிடம் வாளும் இல்லை என்று கேலி செய்தான், அதற்கு தாவீது உன்னிடம் இரும்பால் செய்யப்பட்ட வாள் மட்டும்தான் உள்ளது என்னிடம் எல்லாம் வல்ல இறைவனின் அருள் உள்ளது என்று சொல்லி, தன் கையிலிருந்த கவணில் கல்லை வைத்து கோலியாத்தை நோக்கி வேகமாய் அடித்தான், அக்கல் கோலியாத்தின் நெற்றியில் புதைந்தது அதே இடத்தில் கோலியாத் மூர்ச்சையாகி கீழே விழுந்தான், தாவீது ஓடிப் போய் கோலியாத்தின் வாளையெடுத்து அவனைக் கொன்று போட்டான்.



4.    இப்போது பாம்பு மரத்தை நன்றாகச் சுற்றிவளைத்து உச்சியில் தலைவைத்து கொத்துவதற்குத் தயாராக இருந்தது.
இந்த அடையாளம்.
இது மட்டும் எனது உடலிலிருந்து மறையவுமில்லை, மாறவுமில்லை.
அதைத் தேடிப் பலர் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் தாவீதைத் தேடுகிறார்களா?
இல்லை கோலியாத்தைத் தேடுகிறார்களா?
அது யாராயினும், கதிரையும் காத்திருக்கின்றது.
மரணமும் காத்திருக்கின்றது.
பாவம் என்பது ஒருபோதும் கொல்லப்பட முடியாதது. என் மரணம் தொலைந்துவிட்டது. தொலைந்ததை ஏன் தேடுகிறாய்?
͎͎
இணைந்து செபிப்போம்
ஆண்டவரே இயேசுவே!
நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள் என்ற இறைவார்த்தையை இன்று வாசிக்கக் கேட்கிறேன், நன்றி. தாங்கள் என்மீது பிரியம் கொண்டு இந்த அடையாளத்தைப் பொறித்தீர்கள், மரணத்தை தொலைவில் நிற்கச் செய்தீர்கள். நன்றி செலுத்துகிறேன். பிரிவு என்பது என்னுடைய பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக பார்க்கிறேன். ஆனால் இன்று என் வாழ்க்கைப்பாதை அதனால் உயர்ந்த நிலையில் உள்ளது என்று பெருமையோடு உம் திருபாதத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள எனக்கு வாய்ப்பைக் கொடுக்கின்ற உமது கருணைக்கு நன்றி செலுத்துகிறேன். பிரிவினால் வரும் இன்பத்தையும், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் திடத்தை கொடுத்தருள மன்றாடுகின்றேன். நீர் எனக்கு துணையாக பரிசுத்த ஆவியை கொடுத்து உமது அருளையும், அன்பையும் பொழியும் இரக்கத்திற்கு நன்றி செலுத்தி போற்றுகிறேன். பிரிவினால் வரும் இழப்பை மனமுவந்து ஏற்றுக் கொள்ள உமது பரிசுத்த ஆவியின் கொடைகளை கொண்டு நிரப்ப வேண்டுமாய் என் இனிய கிறிஸ்துவின் பெயரால் செபிக்கின்றேன்.
ஆமென்