திங்கள், 22 மார்ச், 2010

மரக்கட்டைகள்

-ந.மயூரருபன்



கேட்கின்ற கேள்விகளும்இ ஒரு வாய் உணவும் எனது வாய்க்கு அருகருகான அர்த்தத்தையே கொடுத்திருந்தது. இரண்டுக்குமே திறக்கச் சொல்கிறது மனது.
வாய் மட்டுமல்ல எனது உடல் முழுதுமே உலர்ந்திருக்க உணர்ந்தேன். உலகின் ஈரமெல்லாம் கொணர்ந்தாலும் போதாததாய் மனமெங்கும் அனலடித்துக் கொண்டிருந்தது.
இங்கு வெளியேயும் ஒரே அனல்.
முகாமைச் சுற்றிவர உயரமாய் அடிக்கப்பட்டிருந்த முட்கம்பிஇ காற்றைக் கீறிக்கீறி அனலுக்கு உக்கிரமேற்றிக் கொண்டிருந்தது.

கடந்த நாட்களில் காற்றுக்கு நண்பனாக நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதற்கு என்னிடமில்லாத எல்லை கடந்தவைகளை அது கொண்டிருக்கிறதே என்பதும் ஒரு காரணம் தான். காற்று என்னிடம் சற்றுப் பிரியப்பட்டிருந்தது என்பதை சில நாட்களிலேயே நான் உணர்ந்து கொண்டுவிட்டேன்.
மேலும் ஒரு சில நாட்களிலேயே முகாமுக்குள,; ஒதுக்குப் புறமாய் அடைபட்டிருந்த ஒரு மரத்தினை நானும் காற்றும் சேர்ந்து எங்கள் நண்பனாய் அடையாளங் கண்டுகொண்டோம். மூவரும் காற்றுக் கண்டுவரும் கவனிப்புச் சோர்ந்த நேரங்களைத் தேர்ந்து பேசிக் கொள்வோம்.

காற்றும் மரமும் சேர்ந்து எனக்கு எப்போதுமே ஆறுதலைத் தந்து கொண்டிருந்தன. தமது நண்பனின் உயிரை இரண்டும் மாறி மாறி வருடிக் கொண்டன.
எனக்கு உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கின்றன.
காற்றுடன் பேசுகின்ற பொழுதுகளிலெல்லாம் அது வைத்திருப்பவற்றையும் உளவு பார்க்க முயன்றேன்.
நான் ஓடி வந்த வெளிகளில் அடங்கிய மூச்சுக்களை காற்றுத்தானே வைத்திருக்கிறது.
மூச்சுக்களைப் பிரித்தறியும் பக்குவமும் வல்லமையும் என்னிடமிருந்து சென்று விட்டன.
அன்பும் பாசமும் அடியிலேயே அடங்கிக் கொள்கின்றன.

கடந்து வந்த வெளியில் முக்குளித்த ஓலங்கள்இ இன்னமும் அடங்காமல் காற்றுக்குள்ளேயே இருக்கின்றன.
அழுகைகள் என்னை நோக்கி ஓடி வருகின்றன.
இரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது…..
காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
                         “அண்ணை என்னைத் தூக்கிக் கொண்டு போங்கோ”
ஒற்றைக்கால் அறுந்து போன அந்தச் சிறுமியின் அந்தரிப்பான கண்களும்இ பின்பு எனது கைகளில் நிலைத்துப் போன அதே கண்களும் மாறி மாறி என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.
பெருமூச்சு விட்டு நண்பனைப் பாரமாக்க விரும்பாமல்  கண்களை இறுக மூடி மரத்தின் அடிப்பரப்பில் சாய்ந்து கொண்டேன்.

காதுகளடைபட வைக்கும் கேள்விகளால் களைத்துப் போனது உடல். உடம்பிலிருந்து  அனைத்தும் வடிந்திறங்கியது போல் துவண்டு அமர்ந்தேன்.
    “உம்மட மச்சான் உம்மப் பார்க்க வந்திருக்கிறாராம்…. வெளியில 
     நிக்கிறார்….”
மெதுவாய் மரத்தில் கைகளை ஊன்றி எழுந்தேன். கம்பிகளுக்கு  அப்பால் அவன் நிற்பது தெரிந்தது. மூன்று வருடங்களிற்கு முன்புதான் அவனைப் பார்த்திருந்தேன். அதிக மாற்றங்கள் தெரிந்தன.
என்னை இனங்கண்டுவிட்டான். 
          “அத்தான்…” 
மெதுவான குரலில் கூப்பிட்டான். 
அவன் கொஞ்சம் பயந்த சுபாவமும் கூச்ச உணர்வும் கொண்டவன்இ எனினும் தேடிப்பிடித்து வந்துவிட்டான். 
                “சசி… எப்பிடியிருக்கிறாய்…?….. அக்கா…..பிள்ளையள 
        பாத்தனியே….” 
பரபரப்புடன் வாய் முந்திக் கொண்டது.
                  “இருக்கிறன் அத்தான்… அக்காவும் பிள்ளையளும்  
         ……அங்க…..முகாமில இருக்கினம்…..பிரச்சனையில்ல…. நீங்கள் 
         …எப்பிடி….?” 
தயக்கத்துடன் யோசித்து யோசித்து வார்த்தைகள் வந்தன. 
அவனது கண்களும் கலங்கியிருந்தன.

எனது இளையவள் செத்துப் போனதும் மனைவிக்கு இடக்கால் இல்லையென்பதும் எனக்குத் தெரியும். அவனுக்கும் தெரியும்இ 
மறைக்கிறான்.
அவனது கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. நான் கை நீட்டித் துடைக்க முடியாத தூரத்தில் கம்பிக்கு மறுபுறத்தில் சசி நின்று கொண்டிருந்தான்.
அவனுக்கான நேரம் முடிந்துவிட்டதுஇ புறப்படப் போகிறான்.
        “அத்தான் இத வச்சிருங்கோ…”
முள்ளுக்கம்பிக்கூடாக கையினை எட்டி நீட்டினான். அதற்குள் சில ரூபாய்த் தாள்கள் சுருண்டிருந்தன.
சற்று வெறிக்கப் பார்த்தேன். பின் அதனை வாங்கிக் கொண்டேன்.

நான் மீண்டும் மரத்துக்கு கீழே வந்து அமர்ந்தேன். 
      “எல்லாம் இயல்பாகவேதான் இருக்கின்றனவா!?”
எனக்கு யோசிக்கப் பிடிக்கவில்லை. அப்படியே மரத்தின் வேர்களில் படுத்திருக்கஇ காற்று வந்து தடவிக் கொண்டிருந்தது. 

நான்  எனது முகத்தினை வருடிப் பார்த்தேன். நாடிப்பகுதியில் எரிச்சல் சூடாய் நின்றது முகத்தைச் சுளித்துக் கொண்டேன்.
              “ என்ன நண்பா… முகத்த நல்லாத்தான் செதுக்கிப் போட்டாங்கள் 
        போல்…உனக்குக் கொஞ்சமெண்டாலும் அளவில்லாத அச்சு அது…”
ஆறுதலாக இதமாய் வருடியபடியே காற்று கேட்டது.
              “அவங்களுக்கு மண்டேக்குள்ள ஒண்டுமில்ல…அந்த முகத்தின்ர 
       அச்சைக் கொண்டுவந்து என்ர முகத்தில அமத்துறாங்கள் … அதுகும் 
       முகமெண்டு பாக்காமல்… மரக்கட்டைல இறுக்கிற மாதிரி….”
சொல்லும் போதே முகம் முழுதும் கொதித்தது. மீண்டும் காற்றைப் பார்த்துச் சொன்னேன், 
              “அந்த முகம்  எனக்குத்தானெண்டு தீர்மானிச்சுப் போட்டாங்கள்…. 
       எப்பிடியோ ப+ட்டத்தான் போறாங்கள்…..”
காற்று மௌனித்திருந்தது.
             “பொறுமையாயிரு…. வெளியில ஏதும் கதைச்சுக்   
       கொண்டிருப்பாங்கள்……நல்லது நடக்கும்”
மரம் அமைதியைக் கடந்து ஆறுதல் சொன்னது.

காற்று மௌனத்தைவிட்டு மீளவேயில்லை. அது சொல்வதற்கு என்ன இருக்கிறது. பசியடங்கா இருளைப் பற்றி கூறுகின்ற பொழுதே எல்லாவற்றையும் எனக்குக் கூறிவிட்டது.

ஊயிரறுந்து தொங்குகின்ற வேதனையில் ஒருவன்…. இல்லை ஒரு கூட்டமே பதைக்கின்ற பொழுதுகளில் அவர்களைச் சூழ நின்று ஆராய்கிற, கூட்டம் போட்டு கதை பேசுகிற, தேனீர் குடித்த வாய்களை அழுக்குப் படாத் துணிகளால் ஒற்றியெடுத்துச் சிலாகிக்கின்ற பெரிய மனிதர்களைப் பற்றி, காற்றும் சொன்னது. 
என்னைப் போல் ஒரு கை மூச்சைக் கையிருப்பில் வைத்திருக்கின்ற சில பேர் அவர்களை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆனால் காற்றுச் சொல்லாமலேயே எனது மனிதர்களின் இயல்புகளை நான் உணர்ந்து கொள்கிறேன்.

சிறுவர்களதும் பெண்களதும் நிர்வாண உடைகள் மலத்திலும் இரத்தத்திலும் தோய்ந்து போய்க் கிடக்கின்ற பொழுதுகளிலும், பீதியையும் வலிகளையும் விதைக்கும் நீரால் அவர்கள் கழுவப்படுகின்ற பொழுதுகளிலும், புனிதப்படாமல் இறந்தே போகிறார்கள் . 
யாசகமாய் வந்து விழுகின்ற மரணத்தின் கொழுந்துகள் எல்லோர் மடியிலும் வளர்கின்றன, எனக்குள்ளும் எனது நண்பர்களால், உறவுகளால் என்னதான் செய்யமுடியும்.
பிள்ளைகளை அணைத்துக் கொள்வர், மனைவியை முத்தமிடுவர், உடல் மீது முயங்குவர், வியர்த்து வழிய களைத்துப் படுப்பர். 

              “எனக்குப் புரிகிறது உண்மையில் ஒட்டுமொத்தமான ஒரு கோணல் 
       பார்வையை நான் பார்க்கிறேனோ?”
என்னால் முடியவில்லை.
எனது வேதனைகளும் அருகிலிருப்பவர்களின் அரற்றல்களும் எனது சிந்தனையைக் கொல்கின்றன.
எனக்குள் வளர்ந்து வந்த, முனைப்படுத்தி நிற்கின்ற என்னுணர்வுகளைக் கஞ்சி தந்து, சோறுதந்து, பாண்தந்து, தண்ணீர் தந்து அணைக்கிறார்களோ?

               “ ஏய் கொஞ்சம் அடங்கியிரு”
எனது மனதை அதட்டுகிறேன். 
அது தன்னிச்சையாகவே படங்களைக் கீறிச் செல்கிறது.
ஆனால் எனக்குத் தெரியாமலேயே அனைத்தும் சேர்ந்து என்னுணர்வுகளை வளர்த்துச் செல்கின்றன.

             “என்ன நண்பா… நல்லாச் சோர்ந்து போனாய்” 
காற்று மெதுவாக என்னுடலைத் தடவியது.
            “நண்பனே … உன்னை நான் என்ர நண்பனா… மனுசியா, பிள்ளையளா    
      உணருறன்…. அதனால ….ம் …ஆனா நீ என்னை வருடுறத மட்டும்   
      நிப்பாட்டிக் கொள்”
காற்று அசையாமல் மௌனமாய் என்னை ஒரு கணம் பார்த்தது.
            “ இல்ல நண்பா… இந்த வருடலை என்னால தாங்கேலாமல் கிடக்கு…
       வலியும் நோவும் நிரந்தரமானாப்பிறகு இந்த வருடல் எதுக்கு…..”
காற்று சற்றுப் பாரமாய் மரத்தினைச் சுற்றிவந்து பின் அதன் கிளைகளில் அமர்ந்து கொண்டது.
           “நண்பா உன்ர முகம் நல்லாத் தாக்குப்பட்டுப் போச்சு…. தோலெல்லாம்   
      களரத் தொடங்கியிட்டுது….”
மரம் மெதுவாகக் காதுக்குள் நினைப்ப+ட்டியது.

நான் எனது கைகளில் செதுக்கி வைத்திருந்த, என்முக அளவுள்ள அதனைப் பார்த்தேன். எனது முகத்திற்கு இதுதான் பொருத்தமானதென்று அவர்கள் ஒன்றைப் பொருத்த முனைகிறார்கள்.
நானும் பொருத்திப் பார்க்கிறேன்.


ஒரு துளி மூச்சுத்தான் என்னிடம் இருக்கிறது. எனது இரண்டு நண்பர்களிடமும் கூறுவதற்கு எனக்கு ஒரு விடயமுண்டு.
           “காற்று நண்பனே! எனது இறுதி மூச்சையும் எனது உறவுகளின் மூச்சுக்   
      காட்டுக்குள் இறக்கிவிடு…” 
      மர நண்பனே…. விழி திறக்கப்படாத, காதுகளும் வாயும் அடைபட்ட,   
      உனது கிளையில் செதுக்கிய என் முகத்தை உனது இலைகளால் ஒரு   
      தடைவ வருடு….”

                           நண்பர்களே ….நன்றி!

யுகமாயினி பிப்ரவரி 2010

1 கருத்து: