புதன், 10 மார்ச், 2010

பசியடங்கா இருள்

-ந.மயூரரூபன்

நான் படுக்கையில் படுத்திருந்தபடி நெருங்கிவரும் இருளையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா ஒருவரை என்னருகே அழைத்துவந்து இருத்தினாள். நான் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு முனையவில்லை.

அவரின் உருவம் இருளின் செழுமையுடன் கலந்திருந்தது.

வந்தவர்,

“தம்பி….. எப்பிடி இருக்கிறாய்….?”

நான் அவரைப் பார்த்து சிரித்தேன். உதடுகள் சிரமப்பட்டு பிரிந்ததில் சிறிது வலி எட்டிப்பார்த்தது.



“எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்…”

உதடுகள் வார்த்தைகளின் பரிச்சயத்தைக் குறைத்திருந்ததால் சிரமப்பட்ட முணுமுணுப்பாக அது என்னிலிருந்து, மிக ஆறுதலாக வெளிப்பட்டது.

பெரிய பெருமூச்சு ஒன்றுடன் அவர் அமர்ந்திருந்தார்.



“ நந்தினி அக்காவின்ர சிந்து இப்ப வளந்திருக்குமோ”

எனது உதடுகள் மீண்டும் பிரிந்தன.

“தம்பி…இது உன்ர ரஞ்சன் அண்ணை”

அம்மா என்னருகே வந்து தலையைத் தடவியபடி கூறினாள். நான் மீண்டும் அவரை உற்றுப்பார்த்தேன்.

“இல்ல.. சரவணன் வாத்தியின்ர மீசை மாதிரி..”

என்று கூறிய பின் நீண்ட நேரம் முகட்டைப் பார்த்தவாறு படுத்திருந்தேன்.





ஏதோ ஞாபகத்தில் மீண்டும் அவர்கள் பக்கம் பார்iயை திருப்பினேன். போயிருந்தார்கள்.

மீண்டும் முகட்டில் தொங்கும் தூசியில் எனது பார்வையைக் கொழுவினேன்.





ஜன்னல் கம்பிகளில் மெதுவாக சுரண்டுகிற சப்தம்தான், அது என்பதை கண்டுபிடிக்க எனக்கு சிறிது நேரம் எடுத்தது.

எங்கோ தொலைவில், காற்று வதைபடுகிறதெனவே நினைக்க முடிந்தது. மூடியிருந்த இமைகளைப் பிரித்தேன். மிகக் கடினமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. நெற்றியின் இருபக்கங்களும் வலித்துக்கொண்டிருந்தன. ஓர் இழையைச் சுண்டி விட்டது போல சடக்கென உச்சந்தலையிலிருந்து மண்டைக்குள் பாய்ந்து சென்றது வலியின் கீற்று ஒன்று.



மீண்டும் அந்தச் சத்தம்.

ஜன்னல் கம்பிகளில் இலேசாக உராய்கின்றது போல……

“ஓம் அப்பிடிப் போலதான்…”

நான் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து, போர்வையை என்னிலிருந்து வழித்து ஒதுக்கிப் போட்டேன்.



ஜன்னலால் எட்டிப்பார்த்தேன்.

ஒன்றுமே தெரியவில்லை. முற்றத்தில் நிலவின் ஒளி வெண்மையாக படர்ந்திருந்தது. வலப்புற ஓரத்தில் அந்தச் சிறிய விலாட்டு மாமரம் மட்டும் இருட்டினை தனக்குள் இழுத்து வைத்திருந்தது.

மாமரத்தின் கிளைகளின் நுனிகளில் இருந்து இருட்டுக்கள்@ கொத்துக் கொத்தாக வெண்ணிலத்தில் குதித்துக் கொண்டிருந்தன. அந்த உதைப்புகளினால் கிளைகளில் ஓர் ஆவேசமான அசைவு தெரிந்தது.

காற்றும் முற்றத்தில் மண்ணினை சுழற்றி, சீண்டிக் கொண்டிருந்தது. மீண்டும் எனது கவனத்தின் இழை சுண்டி இழுக்கப்பட்டது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

ஒன்றையுமே காணவில்லை. ஆனால் இலேசான மூச்சிரைப்பு கேட்பது போலி;ருந்தது.









“ம்… மூச்சிரைப்பா அது…இல்ல…. இலேசான விம்மல்… ஓமோம்…யாரோ

அழுகையை அடக்க முயற்சி செய்யிற மாதிரி….”



நான் வெளியில் பாய்ந்தேன்.

ஒருவரையுமே காணவில்லை.

ஆனால் நிலத்தில் பல காலடிகள் காணப்பட்டன.



“ஏன் .. நீ…என்ன மறந்து போனியோ”

அழுகையை அடக்கிய மெதுவான குரல் கிசுகிசுப்பாக என்னைக் கேட்டது.

நான் மண்ணிலே அப்படியே குந்தி அமர்ந்தேன்@

“ என்ன முழிக்கிறாய்...? உன்னுடைய கையை கீழ வை….”

நான் கையை மண்ணில் விரித்து வைத்தேன்.

கையில் எதுவோ ஏறுவது தெரிந்தது.

உற்றுப் பார்த்தேன் கண்கள் இலேசாக வலிகண்டன.

அது ஒரு காலடி!



“ என்ன யோசிக்கிறாய்…நான் உன்னுடைய காலடிதான்… இங்க நாங்கள்

கனபேர் வந்திருக்கிறம்…உன்னைப்பாக்க…”

நான் அந்த காலடியை – என்னுடைய காலடியை உற்றுப் பார்த்தேன்.

அது வரண்டு, இலேசாக சுருளத் தொடங்கியிருந்தது. ஆங்காங்கே உதிர்ந்து உடைவதற்குரிய நிலைமைகள் தெளிவாகத் தெரிந்தன.



“ விதிகளில், ஒழுங்கைகளில், நூலக முற்றங்களில்… இப்பிடி ஊரில

இருக்கிற எல்லா இடங்களிலயும் நீ அடிக்கடி வந்து போறனி…. அதனால

நாங்கள் உயிர்ப்போட இருந்தம்….ஆனா இப்ப…நாங்கள் கொஞ்சம்

கொஞ்சமா செத்துக் கொண்டிருக்கிறம்….”

ஒரு பெருமூச்சுடன் இன்னொரு காலடி சொல்லி ஓய்ந்தது.

நான் சிறிது நேரம் அப்படியே பார்த்தபடி இருந்தேன்.



“ ஓமோம்…உங்கள உயிர்ப்பிக்க நான் வாறதில்ல… நான் என்னையே

மறந்திட்டன்…”

எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

“இஞ்ச… உன்ர கையை கொண்டுவா…”

ஓரு காலடி முண்டியடித்துக்கொண்டு என்னருகே நெருங்கியது. நான் கையை வைத்தேன்.

“ ம்ஆ…”

இதமான குளிர் எனக்குள் ஊடுருவியது.



தேர்முட்டிப்படிகள் தங்களை ஞாபகப்படுத்தும்படி கைய+ட்டுக் கொடுத்து அனுப்பியிருந்தன.

இதமான காற்று வீசுகின்ற முன்னிராப் பொழுதில் குளித்தபடி ஆட்டுப் புழுக்கைகள் ஒதுங்கிய படிகள், எனக்காக ஏங்கிக் காத்திருப்பதைக் காலடிகள் சொல்லின.

எனக்குத்தான் காற்று, ஒவ்வொன்றையுமே முன்னமேயே சொல்லிவிடுகின்றதே.

எனது காலடிகளின் படையெடுப்பு என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருந்தது.

அழ வேண்டும்.

“அழு….அழு…”

நான் எனக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தேன்.





காலடிகளுடன் வாசல்வரை சென்றபோது காற்றின் சுழட்டலில் எனது காலடிகளில் திரளாக சுற்றிக் கொண்டிருந்தன – வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள்.

பல நிறங்களில், பல வடிவங்களில்… அவை அலைபாய்ந்து கொண்டிருந்தன, வண்ணத்துப்பூச்சிகளின் உயிர்களைத் தேடி.







மணல் கீழே கொதித்துக் கொண்டிருந்தது. மேலே சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான். அரையில் கட்டிய வேட்டி ஈரத்தை சொட்டிக் கொண்டிருந்தது.

கைகளில் தேங்காயுடன் நான் அம்மாவைப் பார்த்தேன். அவளது கண்கள் முட்டி வழிந்து கொண்டிருந்தன. என்னை கெஞ்சலாகப் பார்த்தாள்.

அம்மாவைக் கண்களில் இருத்திக் கொண்டேன். உடலின் ஒவ்வொரு துடிப்புக்களாலும் அவளைப் பார்த்தேன்.

மணலில் நீட்டிப்படுத்து உருளத் தொடங்கினேன்.

அம்மா கண்களால் நீரைக் கொட்டி தான் நம்பும் கடவுளிடம் போகும் காற்றக்கு தனது அரற்றலால் பாரத்தை ஏற்றிக் கொண்டிருந்தாள்.





அம்மா என்பின்னே அடியழிக்கத் தொடங்கியிருந்தாள். ஒவ்வொரு உருளலின் பின்னும் இருட்டு வைத்திருந்த இரகசியமும் அது கூறிய மந்திரங்களும் எனக்கு சித்தித்திருப்பதனை நான் ஞாபகங்கொள்ளத் தொடங்கினேன்.





இருட்டு என்னைப் பிடித்து தனக்குள் இழுத்தது. இழுக்கப்பட்டதால் தடுமாறி இருட்டுடன் முட்டிக் கொண்டேன். மூக்கு சூடாய் இரத்தத்தைத் தள்ளியதை விரல்களால் உணர்ந்தேன்.

“ இருட்டில் காற்றுக்கு கைகள் முளைக்கின்றன”

இது பலபேர் கூறிய அற்புதமான கதை. நான் அக்கதையின் சொற்களுக்குள் சிக்குப்பட்டிருந்தேன்.





சொற்கள் கடிக்கத் தொடங்கின.

வார்த்தைகள் ஒரே மாதிரியான உச்சாடனங்களாய் மாறி காற்றை அறையத் தொடங்கின. எனது காதுகளும் அதிரத் தொடங்கின. காதுகள் அதிர்வின் எல்லையை கடந்த நிலையில், காற்று உச்சாடனங்களின் உயிர் நாடியைப் பற்றிப் பிடித்துக் கொண்டது.

காற்றுக்குக் கைகள் முளைத்தன.

காற்றின் கைகள் எனது உடலுடன் அற்புதமான ஏற்ற இறக்கங்களுடன் உரையாடத் தொடங்கின.

எனது உடலுக்கு இது ஒரு புதிய மொழி.

எனவே காற்றின் கைகளினது வீச்செல்லைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சோர்ந்து துவண்டு விழுந்தது.





வெளி முழுதும் இருளைப் பழக்கப்படுத்தியிருந்த நான், சாக்கிற்குள் இருளைப் பின்தொடர்ந்து நுழைந்தேன். இறுகக் கட்டப்பட்ட சாக்கினுள் இருட்டும் நானும் சுருண்டு பிணைந்திருந்தோம்.

என்னைத் தின்னத் தொடங்கிய இருட்டுடன் நான் மொனமாயிருந்தபோது, சாக்கின் மோகம் நீரின் பக்கமாய் இருந்தது எனது துரதிஷ்டம்.

சாக்கு ஆவேசத்துடன் கிணற்றுக்குள் பாய்ந்தது.

சாக்குச் செய்தது தவறு என எனது உடல் எதிர்ப்புணர்வைக் காட்டியது.





இருளின் கடவுள் மேலிருந்து அனைத்தையும் பார்த்தான்.

அறிந்தான்,

விளைவு – எனது இருளின் பிணைப்பு தற்காலிகமாக விலக்கப்பட்டது.





இருள் காவித்திரிந்த இரகசியமும் மந்திரங்களும் என்மீது தொன்மங்களின் வழி, மாற்றமற்று கடந்துவந்த மனித நாகரிகத்தின் படங்களை அற்புதமாக வரைந்திருந்தன.

இந்நிலையில் ஏமாற்றத்திற்குள்ளான இருள்@ அதன் பின்பு என்னைப் பின்தொடரத் தொடங்கியிருந்தது. நான் செல்கின்ற எங்கும் இருளும் சற்று எட்ட நின்றிருக்கும்.

இருள் என்னைத் தின்ன மிகுந்த வெறி கொண்டிருப்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நான் நடந்து கொண்டிருந்தேன். இருளும் நடந்து கொண்டிருந்தது.





அம்மா அடியழிக்க அடியழிக்க, நான் உருண்டு கொண்டிருக்கின்ற பொழுதுகளிலும், இருள் என்னுடன் சேர்ந்து உருண்டு கொண்டிருக்கின்றது. நான் இருளின் மணத்தினையே எங்கும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.



இருளின் பரிச்சயத்தால் என்னைச் சுற்றியிருந்த காற்று கறுக்கத் தொடங்கியிருந்தது. காற்றின் ஒவ்வொரு இடுக்குகளிலும் கருமையின் செறிவு ஏறிக் கொண்டிருந்தது.

காற்று இருளின் தூதனாகவே இருந்தான். ஆனால் அவனும் இருள்தான் என்பதை நான் விரைவில் புரிந்து கொண்டேன்.





நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிப்பதைக் குறைத்துக் கொள்ள முயன்றேன்.

எனது படுக்கையறையின் யன்னலுக்கூடாக தெரியும் விலாட்டு மாமரமும் இலேசாக கருமையை உள்வாங்கத் தொடங்கியிருந்தது. நிலவொளி படரும் நிலமும் கருமையை தன்மேல் விழுத்திக் கொண்டிருந்தது.

எனது விழிகள் கருமையின் செறிவை தனக்குள்ளும் உணரத் தொடங்கியிருந்தன.

எனது உயிரின் முனையை இருள் பார்த்துக் கொண்டிருக்கிறது.





பரபரப்பற்று படுத்திருந்தேன்.

எனது உள்ளங்கைகளில் கருமையின் தீற்றலை உணர முடிந்த அன்றைய பொழுதில் எனது எழுத்துக்களை என்முன் குவிக்கத் தொடங்கினேன்.

நீண்ட இரவின் பொழுதுகளில் எனது எழுத்துக்களுடனேயே நான் படுத்திருந்தேன்.

தேநீருடன் வந்த அம்மாவால், எனது படுக்கையில் எரிந்திருந்த எனது எழுத்துக்களின் கருமையையே பார்க்க முடிந்தது.





‘பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்’ தொகுதி 2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக