புதன், 10 மார்ச், 2010

தேங்காய்ச் சொட்டு


-ந.மயூரரூபன்

அம்மா ஒவ்வொரு நாளும் எரிச்சலோடும் சலிப்போடும் சொல்லிக் கொண்டிருப்பா.

“ அரிசிப்பையை ஓட்டை போட்டுட்டுது…”

“ அப்பளத்தைக் காணேல்ல….”

“ தேங்காய்ப் பாதியைச் சுரண்டிப் போட்டுது……”



இப்படி அடிக்கடி அம்மா முணுமுணுத்துக் கொண்டிருப்பா… இதுக்கு என்ன செய்யிறது? ஒரு நாளெண்டாலும் பறவாயில்லை. எந்தநாளும் இப்படித்தான். சரியான தொந்தரவு… என்ன செய்யலாமெண்டு யோசிச்சன்… எலிப்பொறி கண்ணில பட்டுது. எனக்கு பாவமாத்தான் இருந்துது… ஆனால் என்னத்தச் செய்யிறது?



அணில் தேங்காய்ச் சொட்டின்ர மணத்துக்குக் கட்டாயம் வருமெண்டு எனக்குத் தெரியும்.



இந்த அணில் தேங்காய்ச் சொட்டத் தேடிவாறத நினைச்சுப் பாக்கேக்குள்ள, நாங்கள் எந்தச் சொட்டப் பாத்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்தனாங்கள் எண்டு எனக்கு மட்டுமில்ல வந்த எல்லாருக்கும் … பிறகு கூட விளங்கேல்லைத்தான்.



சரி வந்ததுதான் வந்தம் …. ஆனா இங்க….

அந்த அணில் மாதிரி என்ன தொந்தரவு செய்தனாங்கள்? நாங்களும் எங்கட பாடுமெண்டு அவங்கள் சொன்னதக் கேட்டுக் கொண்டுதானே இருந்தம்.



ஒருத்தற்றை சோலிக்குக் கூடப் போகேல்லை.

நான் …. அந்த அணிலைக் கூட … எத்தினதரம் யோசிச்சு … மனமில்லாம கடைசியா அதின்ர ஆக்கினை பொறுக்கமாட்டாமத்தான்…



ஆனா… நாங்கள்?

இவங்கள் எங்களை இப்பிடிச் செய்யிறத்துக்கு முன்னால…

நான் அந்த அணிலுக்காக யோசிச்ச மாதிரி யோசிச்சிருப்பாங்களே?

அப்படி யோசிச்சிருப்பாங்களெண்டு நானெண்டா நினைக்கேல்ல, அந்தப்பொறியை ஏத்திப் போட்டுப் பட்டபாடு எனக்குத்தான்; தெரியும்.



அணில் கீச்… கீச் எண்டு கத்தேக்குள்ள… நெஞ்சுக்குள்ள ஒரு தடக்…

பொறுக்கமாட்டாம… பொறியைக் கழட்டி விடுவமோ எண்டும் நினைச்சன்.



இடைக்கிடை பொறி வைச்ச இடத்தை ஓரக்கண்ணால பார்த்துக் கொண்டும் இருந்தன்.

அணில் வரேல்ல. எனக்கு அப்பிடிப் பாத்துக்கொண்டிருக்கத் தைரியமில்லை. எழும்பிப் போயேவிட்டன்.



எங்களை…. அதுதான் என்னையும் என்ர சினேகிதியையும் பிடிச்சக்கொண்டு போகே;குள்ள எனக்கு இதொண்டும் நினைவு வரேல்ல. லேசான பயந்தான் இருந்துது.

விசாரிச்சுப்போட்டு விட்டிடுவாங்கள் தானே….



ஆனா…

நாலைஞ்சு பேர்…

எனக்கு… பயங்கரமா ஏதோ நினைப்புகள் …



ஆரோ கையைப் பிடிச்சுக் கூட்டிக் கொண்டுவந்து இருட்டுக்குள்ள தள்ளிவிட….

சுத்திவரப் பேயள் நிண்டு குதிக்கிற மாதிரி எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.



மரத்துப்போன மாதிரி….

ஏதோ ஒண்டு என்னைக் கௌவிச் பிடிச்சமாதிரி…



அந்த நேரத்திலையும் நான் இதத்தான் யோசிச்சனான்…

நான்…. இல்லை… நாங்கள் அப்பிடி என்னதான் செய்தனாங்கள்?

அதுக்கு இப்பகூட விடை கிடைக்கேல்லை.



நான் அந்த அணிலுக்கு வச்ச பொறியை எடுத்து விடுவமோ எண்டு யோசிச்சமாதிரி… அவங்கள்…. யோசிச்சிருப்பாங்களே.... ?

அப்பிடி யோசிச்சிருக்க மாட்டாங்களெண்டு அப்பதான் விளங்கிச்சுது. முந்திக் கேள்விப்பட்ட விசயங்களுக்கு இப்பதான் வடிவம் கிடைச்சுது.



நான் அந்த அணிலைப் பிடிச்சு வைச்சு ஒரு சித்திரவதை கூடச் செய்யேல்லை. அதைச் சீண்டிவிட்டு வேடிக்கை பாக்கேல்லை. அதுக்குப் பல்லால கடிக்கேல்லை, நெருப்பால சுடேல்ல, அடிக்கக்கூட இல்லை, அதின்ர தன்மானத்தைச் சுடுற மாதிரி மானத்தோட விளையாடேல்ல.



ஒரேயொரு சத்தந்தான்.

“ படார் ” எண்டு கேட்டுது.

ஓடிப்போய்ப் பாத்தன், தலை பொறியுக்குள்ள அம்பிட்டுட்டுது. பொறியை ஒருசுற்றுச் சுற்றி இழுத்துப் போட்டு அடங்கிவிட்டுது.

கண நேரந்தான்.



ஆனா … அவங்கள் எங்களை … நாள் முழுக்க அறையுக்குள்ள அடைச்சு வைச்சு …. வாறவங்கள் போறவங்களெல்லாம் …

அதுகளெல்லாம் என்னத்துக்கு இப்ப …



இப்பகூட … அதை நினைக்கேக்குள்ள முகம் உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதி;ரி …

அப்படி ஒரு உணர்வுதான் … ஆனா என்ர உடம்பு?

எங்களை மோசமா சித்திரவதை செய்தாங்கள்.

என்னென்ன செய்யமுடியுமோ எல்லாம் செய்தாங்கள்.

முதலில பெருங்குரலில அலறினனாங்கள்தான் ….

ஆனா போகப்போக … குரல் வரேல்லை. எவளவு நேரமெண்டு அலறுறது?

தொண்டையும் வறண்டு போட்டுது.



உடம்பெல்லாம் கந்தலாப் போனமாதிரி … தொய்ஞ்சு கிடந்துது …

வேதனை, உடம்பெல்லாம் நோ … அசையமுடியேல்ல,

நெருப்புப் பிடிச்சமாதிரி ஒரு உணர்வு. கண்ணில சூடான நீர்திரண்டு வழிஞ்சுது.

சிகரட்டுப் புண்களும் பல்லுக்காயங்களும் அடியின்ர வலிகளும் மரத்துப்போனமாதிரி நினைப்பு.



எனக்கு என் மேலேயே ஆத்திரம் வந்தது ஏன் இன்னும் உயிர் போகேல்லை?



இருட்டினாப்பிறகு ரெண்டுபேர் வந்தாங்கள். என்னையும் என்ர சினேகிதியையும் இழுத்துக்கொண்டு போனாங்கள். அந்த இருட்டுக்குள்ள காத்தின்ர “ ஊ “ எண்ட ஊளையில அது ஒரு வெளியெண்டு தெரிஞ்சுது, அதோட நடக்கப் போறதும் தெரிஞ்சுது.



அணில் பொறியில அம்பிட்டவுடன நான் அம்மாவக் கூப்பிட்டன்.

அதை அங்கால தூக்கிக்கொண்டு போகச்சொல்லிக் கத்தினன். அம்மா குசினிக்குள்ள இருந்தபடியே என்னையே தூக்கிக் கொண்டு போய் வெளியில போடச் சொன்னா.



“ஐயோ எனக்குத் தெரியாது”

எண்டு நான் அந்தப் பக்கமே பாக்காமல் வெளியில ஓடிவிட்டன்.

பேந்து அதை… தம்பிதான் எடுத்துக்கொண்டுபோய் வெட்டித் தாட்டவன்.

அண்டைக்கு நான் திரும்ப வீட்டுக்குள்ள போனபோது பாத்தன், அது கொஞ்சம் பெரிய அணில்மாதிரி எனக்குத் தெரிஞ்சுது.

வளையில இருந்துகொண்டு வாலைத் தூக்கித் தூக்கி அடிச்சபடி கீச் .. கீச் … எண்டு கத்திக் கொண்டிருந்தது.



அது தாய் அணில் போல ….

ஓ! அதுதான் அந்த …. அடிபட்டுச் செத்ததின்ர தாய் …..

அது அண்டுமுழுக்க அந்த இடத்தில நிண்டு வாலை அடிச்சுக்கொண்டு….. கத்திக்கொண்டே இருந்துது.

இடைக்கிடை வளையில அங்கையுமிஞ்சையும் ஓடிப்போட்டு வந்து திரும்பவும் கத்திச்சுது.



அது தன்ர குட்டியணிலக் கூப்பிடுறது போல எனக்கு இருந்தது.

நிலைகொள்ளாமல் அது தவிச்சுக் கொண்டிருக்குது எண்டு நான் ஊகிச்சன்.

எனக்குச் சரியான கவலையாக இருந்தது.

அந்த தாயணில் அழுகிற மாதிரி ஒரு நினைப்பு.



எனக்கு அண்டைக்கு நித்திரையே வரேல்லை.

அழுது கொண்டுதான் படுத்தி;ருந்தன்.

இப்ப … எனக்கு இந்த தாயணில நினைக்கேக்குள்ள என்ர அம்மாவின்ர நினைப்புத்தான் வரும்.



அவவும் இப்பிடித்தான். ரியூசனுக்குப் போனபிள்ளை வருகுது….. வருகுது … எண்டு வாசலையே பாத்துக்கொண்டு நிண்டிருப்பா.

எத்தின நாள் சாப்பாடில்லாம சுருண்டிருப்பா …

எவளவு இரவுகள் நித்திரை இல்லாம கண்ணீர் விட்டுப் புலம்பியிருப்பா.



எனக்கு இப்பவும் கவலையாத்தான் கிடக்குது.

எங்களுக்கு முதல் புதைஞ்சவையையெல்லாம் கிண்டித் தூக்கி ஆராய்ச்சி செய்யினம்.

அம்மாவுக்கு … அது …. என்ர நினைப்பை இன்னும் நல்லாக் கிளறி விட்டிருக்குமெண்டு நினைக்கிறன்.

அங்கை அம்மா … என்னை அடையாளங்காண, காத்துக்கொண்டிருப்பா.



அது சரி ....

அந்தக் குட்டியணிலின்ர கெதிமற்ற அணிலுகளுக்கும் தெரிஞ்சிருக்குமோ? தெரிஞ்சிருக்காதெண்டுதான் நினைக்கிறன்.

அப்பிடித் தெரிஞ்சிருந்தா தேங்காய்ச் சொட்டைத் திரும்பிப் பாக்குங்களே!



ஆனா … எங்களைப்பற்றித் தெரிஞ்சிருந்தும் எத்தினபேர் அந்தச் சொட்டை சுவடெடுத்துத் தேடிவருகினம்!

இதுக்கு என்னத்தைச் செய்கிறது?



ம் … எனக்கேன் மற்றாக்களைப் பற்றிக் கவலை?

அம்மாவை நினைக்க ….



ஓ ….. அந்தத் தாயணில் தன்ர குட்டியணிலின்ர உடல்க் கூட்டை கடைசி வரையும் கண்டிருக்காது.

அது மாதிரி அம்மாவும்….









சரிநிகர்,

ஈழநாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக